ஞாயிறு, 20 மார்ச், 2011

இறைவனிடம் கேட்பது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு- RASMIN M.I.Sc


ஒரு மனிதன் இறைவனிடம் தனது தேவைகளை முன்வைப்பதற்கு இஸ்லாமிய மார்க்கம் அழகிய நடை முறைகள் பலவற்றைக் கற்றுத் தருகிறது.அதிலே மிகவும் முக்கியமான நடைமுறை எவருக்கு எந்தத் தேவையானாலும் அதை அவர் தனது இறைவனிடம் நேரடியாக் கேட்க்க வேண்டும் இடைத்தரகர் வைக்கக் கூடாது. அதே போல் எந்தக் காரணம் கொண்டும் இறைவன் அல்லாதவர்களிடம் கேட்கவே கூடாது அப்படிக் கேட்டால் அது இறைவனுக்கு இணை வைத்தல் என்ற மாபெரும் குற்றமாக கருதப்படும்.

தான் பலவீனமானவன் என்பதையும் இறைவன் சர்வ சக்தி படைத்தவன் என்பதையும் பிரார்த்தனையின் மூலம் மனிதன் ஒப்புக் கொள்கின்றான். எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களும் இதை வலியுறுத்தியுள்ளார்கள்.

''பிரார்த்தனை தான் வணக்கமாகும். (ஏனெனில்) உங்கள் இறைவன் கூறுகின்றான்: என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூற்கள் : அபூதாவூத் (1264) திர்மிதீ (3294) இப்னுமாஜா (3818) அஹ்மத் (17629)

மேற்கண்ட செய்தியில் நமது தேவைகளை எந்தக் காரணம் கொண்டும் மரணித்தவர்களிடமோ அல்லது மத போதகர்களிடமோ அல்லது உயிரோடு வாழ்ந்து கொண்டு தம்மை மகான்கள் என்று கூறி கதை அளப்பவர்களிமோ கேட்கக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இறைவனிடம் பிரார்த்திப்பதைப் பற்றி இறைவன் இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதைப் பாருங்கள்.

உங்கள் இறைவனைப் பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

அச்சத்துடனும்இ நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. (அல்குர்ஆன் 7:56)

அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். (அல்குர்ஆன் 32:16)

''நீங்கள் பிரார்த்தித்தால் (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள். 'அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு' என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பது ஆகாது.) ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் எவருமில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்கள் : புகாரி (6338) முஸ்லிம் (4837)

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (மேடான பகுதியில்) ஏறும் போது 'லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்றும் 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்' என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள் ''மக்களே! மெதுவாகக் கூறுங்கள்! ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ அல்லது மறைந்திருப்பவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன்; அவனது பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) நூல்கள் : புகாரி (2992 - 4205 - 6384 - 6409 - 6610 - 7386) முஸ்லிம் (4873 - 4874)

இதுதான் இஸ்லாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது தொடர்பாக சொல்லித் தரும் அழகிய நடை முறைகள் இந்த நடை முறைகளை விடவும் அழகான வழிகாட்டுதல்களை எங்கும் பெற முடியாது என்பது தெளிவு.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு